Friday 22 September 2017

மனிதாபிமானம் உள்ள காவல் துறை ஆய்வாளர்


மனிதாபிமானம் இன்னமும் மரித்துப் போகவில்லை.அதுவும் காவல் துறை அதிகாரிகளும் மனிதர்கள் தானே என்பதையும் நிரூபித்து விட்டார்.

வாய் புற்றுநோயால் அவதிப்பட்டு வந்த செந்தில் என்பவரை மருத்துவமனை துரத்த, உறவினர்கள் கைவிட, துற்நாற்றம் வீசுவதாக புகார் கொடுக்க R.8 வடபழனி ஆய்வாளர் திரு.சந்துரு அவர்கள் செந்திலை அழைத்து வந்து மதுரவாயலில் உள்ள தனியார் தொண்டு மருத்துவமனையில் சேர்த்து, உரிய சிகிச்சை பெற உதவியனார்.

இது பொதுமக்களிடையே பாராட்டை பெற்றுள்ளது.தவறு செய்தால் காரிதுப்பும் நாம் ... இவரை போல் செய்யும் நல்லதை அதிகாரிகளை நாமும் வாழ்த்தலாமே.

Wednesday 20 September 2017

ரூ. 5க்கு ஒரு கேன் (20 லி) மினரல் வாட்டர் கொடுத்து தன் சொந்த ஊர் மக்களை மகிழ்ச்சி படுத்தும் சமூக சேவகர்


புத்தாம்பூரை சேர்ந்த சிவராம் (36). மரைன் இன்ஜினியரிங் முடித்துள்ள இவர், மாலுமியாக பயிற்சியும் பெற்றுள்ளார். தற்போது, சென்னை விருகம்பாக்கத்தில் வசித்து வருகிறார். கடந்த 2015-ம் ஆண்டு இறுதியில் பெருமழையால் சென்னையே தண்ணீரில் தத்தளித்த போது, குடிக்க தண்ணீரின்றி மக்கள் கடும் சிரமப்பட்டனர். அப்போது, தண்ணீரை சுத்திகரித்து வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு தூய்மையான குடிநீர் வழங்கினார். இதனால், சென்னை மக்களால் தண்ணீர் மனிதர் என்றழைக்கப்பட்டார் சிவராம். 

தனது, சொந்த ஊரான புத்தாம்பூர் மக்களுக்கு தூய்மையான குடிநீர் கிடைக்க வேண்டும் என்ற எண்ணத்தில், சொந்த செலவில் ரூ. 10 லட்சம் மதிப்பில் சுத்திகரிக்கப்பட்ட குடிநீர் (ஆர்.ஓ.,சிஸ்டம்) வழங்கும் இயந்திரத்தை நிறுவி பாதுகாப்பான குடிநீரை வழங்கி வருகிறார். 

ஆழ்துளை கிணற்றில் இருந்து வரும் தண்ணீரை தொட்டியில் ஏற்றப்பட்டு அங்கிருந்து, ஆர்.ஓ., பிளான்ட்டுக்கு கொண்டு செல்லப்பட்டு ரூ.5க்கு (20 லிட்டர்) குடிநீர் தானியங்கி இயந்திரம் மூலம் வழங்கப்படுகிறது. 5 ரூபாய் நாணயத்தை இயந்திரத்தில் சொருகினால் (20 லிட்டர்) தண்ணீர் கேனில் நிரம்பிவிடுகிறது. இது இப்பகுதி மக்களிடம் பெரும் வரவேற்பை பெற்றுள்ளது.





34வருடங்களாக இலவசமாகக் கல்வி போதிக்கும் மாற்றுத்திறனாளி!



34வருடங்களாக இலவசமாகக் கல்வி போதிக்கும் மாற்றுத்திறனாளி! 
மலைவாழ் குழந்தைகளின் 'ஹீரோ' மாணிக்கம்...

பிறவியிலேயே சூம்பிப்போன கால்கள், தவழ்ந்து நடக்கும் நிலையிலும், ஊனத்தைத் தூக்கி வீசிவிட்டு, கல்வி அறிவில் பின்தங்கிய பகுதியாக விளங்கும் பச்சமலை மலைவாழ் குழந்தைகளுக்கு, 34 வருடங்களாக இலவசமாக கல்விச் சேவை புரிந்துவருகிறார், மாற்றுத்திறனாளியான மாணிக்கம்.

திருச்சி மாவட்டம், துறையூரை அடுத்த பச்சமலையில் உள்ள புத்தூர்தான் இவரது சொந்த ஊர். பிறக்கும்போதே, இரண்டு கால்களும் ஊனமாக இருந்தன. நடக்க மிகவும் சிரமப்பட்டாலும், படிக்க வேண்டும் என்கிற எண்ணத்துடன், திருச்சியில் தங்கிப் படித்த மாணிக்கத்தால், இ.எஸ்.எஸ்.எல்.சி-க்கு மேல் படிக்க முடியவில்லை. அதனால், சொந்த ஊரிலேயே தங்கியிருந்தவர், படிப்பதற்குத் தான் பட்ட கஷ்டங்களைத் தன் ஊர் குழந்தைகள் படக்கூடாது என நினைத்தார்.

தன் ஊரில் உள்ள அரசு நடுநிலைப் பள்ளியில் போதிய ஆசிரியர்கள் இல்லாததாலும், அப்பகுதி மக்களுக்கு போதிய கல்வி விழிப்பு உணர்வு இல்லாததாலும், படிக்க வரும் குழந்தைகள் குறைவாக இருந்தனர். தன் கிராமத்தில், தான் படித்த பள்ளியின் நிலமையை மாற்ற எண்ணிய மாணிக்கம், அந்தப் பள்ளிக்குச் சென்று, குழந்தைகளுக்குப் பாடம் நடத்த ஆரம்பித்தார்.

மாணிக்கத்திடம் பேசியபோது, “இப்பவே இந்தப் பகுதியில் கல்வி அறிவு குறைவாக இருக்குமென்றால், 48 வருடங்களுக்கு முன், இதைவிட மோசமாக இருந்திருக்கும். போக்குவரத்து வசதியே இல்லாத காலம். மக்களிடம் அவ்வளவாக விழிப்புஉணர்வு இல்லாததால், பலர் பள்ளிக்குப் போனதே இல்லை. அதை உணர்ந்த அரசாங்கம், 5-ம் வகுப்பு வரை உண்டு உறைவிடப் பள்ளி தொடங்கியது. நான், இங்குதான் 5-ம் வகுப்பு வரை படித்தேன். பிறகு, அதற்குமேல் திருச்சியில் தங்கிப் படித்தேன். குடும்பச் சூழலால் இ.எஸ்.எஸ்.எல்.சி-க்கு மேல் படிக்க முடியவில்லை. எனது அண்ணன் தங்கராசுக்கு பள்ளியில் அலுவலக உதவியாளராக வேலை கிடைத்தது. ஓய்வாக இருக்கும் நேரங்களில், அண்ணனுடன் பள்ளிக்கூடத்துக்குப் போவேன். அப்படிப் போகும்போது, ஆசிரியர் பற்றாக்குறையால், மாணவர்களுக்குப் பாடம் சொல்லிக்கொடுப்பதில் சிக்கல் இருப்பதை உணர்ந்தேன். நான் படித்த பள்ளிக்கும், சொந்த ஊர் குழந்தைகளுக்கும் கல்விச் சேவை செய்ய நினைத்து, விருப்பத்தை பள்ளித் தலைமை ஆசிரியரிடம் கூறினேன். அவரும் சம்மதித்தார்.

இந்தப் பகுதியில் படிப்பறிவு குறைவு என்பதால் அவ்வளவாகப் பிள்ளைகள் படிக்க வர மாட்டார்கள். பெற்றவர்களிடம் பேசி, குழந்தைகளை அழைத்துவந்து பாடம் சொல்லிக்கொடுக்க ஆரம்பித்தோம். இந்தப் பகுதியில் பள்ளிக்குச் செல்லாத குழந்தைகளே இருக்கக்கூடாது என நினைத்தேன். பள்ளியில் பாடம் நடத்தியதுபோக, காலையிலும் மாலையிலும் டியூஷன் எடுக்கிறேன். லீவு விட்டாலும் பிள்ளைகளுக்கு பாடம் நடத்துவேன். அதனால், மாணவர்கள் நம் கண்காணிப்பிலேயே இருக்கிறார்கள். தமிழ், அறிவியல் பாடங்கள் எடுக்கிறேன்.

ஆரம்பத்தில் இங்கு வேலைசெய்கிற ஆசிரியர்கள், என் செலவுக்கு 5, 10 ரூபாய் கொடுத்தாங்க. நம்ம ஊருக்குச் சேவைசெய்ய பணமெல்லாம் வேண்டாம் என மறுத்தேன். கைச்செலவுக்கு உதவும் என ஆசிரியர்கள், மாதம் 200ல் ஆரம்பித்து இப்போது 1000 ரூபாய் கொடுக்கிறார்கள். இப்படியே 34 வருடங்கள் போயிடுச்சு. இன்னும் கொஞ்ச காலம்தான். அதுவரை எங்க ஊரில் படிக்காத குழந்தைகளே இருக்கக்கூடாது என்பது என்னோட ஆசை. அதற்காக, சாகும்வரை உழைப்பேன்” என்றார் நம்பிக்கையோடு.

வணங்குறேன்அய்யா.....

Tuesday 19 September 2017

காதலுக்கு கண்ணில்லை என்பதை நிரூபித்த இளம் ஜோடி!


காதல் என்பது உண்மையில் எதையும் எதிர்பார்க்காத ஒன்று என்று நிரூபித்த இளம் ஜோடியின் புகைப்படங்கள் சமூகவலைதளங்களில் வைரலாகி வருகின்றது.

குறித்த இளம் ஜோடிகள் காதல் திருமணம் செய்து கொண்டுள்ளனர்.

திருமண புகைப்படங்களை சமூகவலைத்தளங்களில் வெளியிட்டதை தொடர்ந்து பலரும் தமது வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர்.


Monday 18 September 2017

1960 கர்நாடகாவில் இருந்து தண்ணீர் தாருங்கள் இப்போ! நடக்கும் இதே பிரச்சனை



1960 கர்நாடகாவில் இருந்து தண்ணீர் தாருங்கள்
இப்போ! நடக்கும் இதே பிரச்சனை
காமராஜர் கேட்கிறார் நிஜலிங்கப்பாவிடன் இப்போது போலவே! அப்போதும் இல்லை என்ற பதில்.

செய்வது அறியாத ஐயா!
பிரதமர் நேருவிற்கு போன் செய்கிறார். நேரு கூறுகிறார் நான் பிரதமர் நான் தலையிட முடியாது
ஆனால் ஒரு வழி சொல்கிறேன் இப்போது கர்நாடகாவில் தொழில்சாலை வளர்ந்து வருகிறது அவர்களுக்கு மின்சாரம் தேவை நெய்வேலியில் கிடைக்கும் மின்சாரத்தை கொடுத்து நீரை பெற்று கொள்ளுங்கள் என வழி சொல்கிறார். அதையே ஐயாவும் செய்து மதுரைக்கு தண்ணீரை கொண்டுவருகிறார்.ஐயா சிந்திக்கிறார் 25% விகித மின்சாரத்தை கொடுத்தால் தமிழ் நாடு பற்றுக்குறையை சந்திக்க நேரிடும் எனவே! கர்நாடகாவின் தண்ணீரை கொண்டே குண்டா திட்டத்தை நிறைவேற்றுகிறார். வைகை டேம் தான் அது …

.அதைகொண்டு கர்நாடகாவுக்கு கொடுத்த மின்சாரத்தையும்உற்பத்தி செய்துவிடுகிறார். வைகை டேம் கட்ட இரு புரமும் மலை வேண்டும் என வல்லுநர் குழு கூறியது. ஆனால் மதுரையில் அந்த மலை இல்லை. பொறியாளர் தாமஸை அழைத்து மலை இல்லை என்றால் பரவாயில்லை நீ தைரியமாக கட்டு என்கிறார். தாமசும் கட்டி முடிக்கின்றார்.மொத்தம் ஒதுக்கப்பட்ட நிதி 2.75 கோடி

ஆனால் இரண்டு கோடியில் முடிக்கப்பட்டு 75லட்சத்தை திருப்பி தருகிறார் அரசுக்கு .ஐயா இந்த தொகையை தாமசிடமே கொடுத்து டேமை சுற்றி பார்க் கட்டுங்கள் அதை சினிமா துறைக்கு வாடகைக்கு விடுங்கள் அந்த தொகையை கொண்டு டேமை பராமரிப்பு செய்யுங்கள் என்றார் ஐயா..
இன்றைய அரசியல் ஜாம்பவான்களே இது தான் அரசியல் நிர்வாகம் இது தான் வளர்ச்சிக்கான திட்டம்.ஐம்பது வருடமாக நீங்கள் நிர்வாகத்தில் என்ன செய்தீர்கள் என்றே! தெரிய வில்லை

விரைவில் தொப்பையைக் குறைக்க உதவும் யோக முத்ரா!


யோக முத்ரா என்னும் ஆசனத்தை தினமும் செய்து வந்தால் எண்ணற்ற நன்மைகளைப் பெறலாம். குறிப்பாக நீண்ட நேரம் கம்ப்யூட்டர் முன் உட்கார்ந்து வேலை செய்பவர்கள் யோக முத்ராவை செய்து வருவது நல்லது. இதனால் முதுகுத்தண்டுவடத்தில் நல்ல வளைவு ஏற்படுவதோடு, முதுகு வலி வருவது தடுக்கப்படும்.

சிலருக்கு காலையில் எழுந்து, வாக்கிங், ஜாக்கிங், ரன்னிங் போன்ற உடற்பயிற்சிகளை செய்ய நேரம் இருக்காது. அத்தகையவர்கள், காலையில் எழுந்து வீட்டிற்குள்ளேயே ஒரு பத்து நிமிடம் செலவழித்து, இந்த யோக முத்ரா ஆசனத்தை செய்து வரலாம். இதனால் மன அழுத்தம் கூட நீங்கும்.

சரி, இப்போது அந்த யோக முத்ராவை எப்படி செய்வதென்றும், அதனை செய்வதால் என்ன நன்மை கிடைக்கும் என்றும் பார்க்கலாம்.

தசை இறுக்கத்தை தளர்த்தும்

யோக முத்ரா நிலையானது ஒருவரின் இறுக்கமான தசையை தளர்த்தி, உடலை ரிலாக்ஸ் செய்யும்.

குடல் சீராக இயங்கும்

யோக முத்ரா செய்வதால், சீராக செயல்படாமல் இருந்த குடல்கள் நன்கு செயல்பட்டு, அதனால் செரிமானம் நன்கு நடைபெற்று, கழிவுகள் குடலின் வழியே வெளியேறும்.

சிறுநீரக மண்டலம்

சிறுநீரக மண்டலம் எவ்வித தங்குதடையின்றியும் நடைபெற யோக முத்ரா உதவும். மேலும் சிறுநீரகத்தில் ஏதேனும் பிரச்சனைகள் இருந்தாலும் குணமாகும்.

மலச்சிக்கல் நீங்கும்

யோக முத்ரா நிலையின் போது இரண்டு குதிக்கால்களும், பெருங்குடலும் நன்றாக அழுந்துவதால், நாள்பட்ட மலச்சிக்கல் நீங்கும்.

நரம்புகள் வலிமை பெறும்

உடலின் தண்டுவடத்தில் இருந்து செல்லும் நரம்புகள் அனைத்தும் வலிமைப் பெறும். இதனால் உடல் ஆரோக்கியம் மேம்பட்டு, நாள் முழுவதும் சுறுசுறுப்புடன் செயல்பட உதவும்.

நீரிழிவு

நீரிழிவு நோயாளிகள் உணவில் கட்டுப்பாட்டுடன் இருப்பதோடு, போதிய உடற்பயிற்சியை செய்து வர வேண்டும். அதிலும் யோக முத்ரா நிலையை தினமும் தவறாமல் செய்து வந்தால், நீரிழிவை கட்டுப்பாட்டுடன் வைப்பதோடு, அதனால் ஏற்படும் வேறு பல பிரச்சனைகளையும் தவிர்க்கலாம்.

முதுகு வலி

முதுகு வலியால் அவஸ்தைப்படுபவர்கள், இந்த யோகா முத்ரா ஆசனத்தை செய்து வந்தால், முதுகு வலி பறந்தோடிவிடும்.

தொப்பை குறையும

முக்கியமாக இந்த யோகா நிலையின் போது வயிற்றுப் பகுதி அதிகம் அழுத்தப்படுவதால், வயிற்றைச் சுற்றி தேங்கியுள்ள கொழுப்புக்கள் கரைந்து, தொப்பை விரைவில் குறையும்.

யோக முத்ரா ஆசனம் செய்யும் முறை 

முதலில் பத்மாசனம் போல் அமர்ந்து, பின் கைகளை பின்னே மடித்து, வலது கை, இடது காலின் பெருவிரலையும், இடது கை வலது காலின் பெருவிரலையும் தொடுமாறு பார்த்துக் கொண்டு, மூச்சை வெளியே விட்டவாறு குனிந்து, மூக்கு அல்லது வாயால் தரையைத் தொடவும். இப்படி 30 வினாடிகள் இருக்கவும். பின் மூச்சை உள்ளே இழுத்தவாறு எழவும். இப்படி தினமும் 3 முறை செய்து வர வேண்டும். இந்த ஆசனத்தில் ஆரம்ப காலத்தில், கைகளை பின்புறம் கட்டியவாறு குனித்து இந்த ஆசனத்தை செய்யலாம்.

குழந்தை வளர்ப்பு:குழந்தைகளின் திறமையை எப்படி கண்டுபிடிப்பது?


"என் குழந்தை படிப்பில் சுட்டி, விளையாட்டிலும் படுசுட்டி." என்று பெற்றோர்கள் பக்கத்து வீட்டுக்காரர்களிடம் சொல்லி பெருமைப்படுவது உண்டு. தன் குழந்தையிடம் என்ன திறமையிருக்கிறது என்று தெரியாமலே புலம்பி, குழம்புகிறவர்களும் உண்டு.

திறமை எல்லோரிடமும் இருக்கிறது. ஒவ்வொருவருக்கும் ஒரு குறிப்பிட்ட துறையில் இந்த திறமை அதிகமாக இருக்கும். அது எந்த துறை என்பதை உணர்ந்து தேடிக் கண்டுபிடிக்க வேண்டும். அதன்பின்பு அதை வளர்ப்பதற்கு என்னென்ன வழிமுறைகளைப் பின்பற்றுவது என்று யோசிக்க வேண்டும். அதற்கு நாம் அந்த துறையைப் பற்றிய தகவல்களை விரல்நுனியில் தெரிந்து வைத்திருக்க வேண்டும். அப்போதுதான் உங்கள் குழந்தைகள் விரும்பிய துறையில் ஜொலிக்க முடியும்.

குழந்தைகளிடம் இருக்கும் திறமையை எப்படி கண்டு பிடிப்பது?
சில குழந்தைகள் கையில் பேனா, குச்சி போன்ற ஏதாவது ஒரு எழுதுபொருள் கிடைத்துவிட்டால் சிலேட்டிலோ அல்லது தாளிலோ கிறுக்கிக் கொண்டே இருப்பார்கள். இந்த குழந்தைகளுக்கு ஓவியம் வரைவதில் ஆர்வம் இருக்கிறது என்பதை அவர்களது பெற்றோர்கள் தெரிந்து கொண்டு அந்த துறையில் அவர்களை ஊக்கப்படுத்தலாம். கிறுக்கிக் கிறுக்கி வரையும் போது ஓவியத்திறமை வெளிப்படும். இதைத்தான் 'சித்திரமும் கைப்பழக்கம்' என்று கூறுவர்.

அதேபோல் சிலருக்கு பாடுவதில் மிகவும் ஆர்வம் இருக்கும். அவர்களுக்கு பிடித்த பாடல் எங்கேயாவது கேட்டுவிட்டால், அதே ராகத்துடனே இவர்களும் சேர்ந்து பாட ஆரம்பித்து விடுவர்.

மிமிக்ரி, நடனம், நடிப்பு, இசை, தையல், விளையாட்டு, பேச்சுக்கலை, விண்வெளி ஆராய்ச்சி, இயற்பியல், வேதியியல், உயிரியல் போன்ற துறைகளில் ஆராய்ச்சி, சமூக சேவை என்று அவர்களுக்கு எந்தெந்த துறையில் ஆர்வம் உள்ளது என்பதை அவர்களது செயல்பாடுகளை வைத்தே கண்டுபிடித்து விடலாம்.

* உங்கள் குழந்தைகளின் ஆர்வம் எந்த துறையில் உள்ளது என்பது பற்றி நீங்களே உணர்ந்தாலும்கூட, குழந்தைக்கு அதில் மிகுந்த ஆர்வம் உள்ளதா என்று அவர்களிடமே கேட்டு அதை உறுதிப்படுத்திக் கொள்ளுங்கள்.

* எந்தவிதக் கட்டாயத்தின் பேரிலும், மற்ற குழந்தைகளுடன் உங்கள் குழந்தைகளின் திறமையை ஒப்பிட்டு அவர்கள் முன் குறை சொல்லி விடாதீர்கள்.

* பக்கத்து வீட்டு குழந்தைகள் பாடுவதில் கில்லாடியாக இருக்கலாம். உங்கள் குழந்தைக்கு பாடுவது சிரமமான காரியமாக இருக்கும். அதற்காக அந்த குழந்தையைப் போல் உங்கள் குழந்தையையும் பாட்டு கிளாசில் சேர்த்து அவர்களை சிரமப்படுத்தாதீர்கள். உங்கள் குழந்தைக்கு எதில் ஆர்வம் உள்ளது என்பதைத் தெரிந்து கொண்டு அவர்கள் விரும்பும் துறையில் சேர்த்து விடுங்கள்.

* உங்கள் குழந்தை திறமையை வெளிப்படுத்தி பரிசு வாங்கி வரும்போது அவர்களை பாராட்டத் தயங்காதீர்கள். அதேபோல் தோல்வியடைந்தாலும் தட்டிக்கொடுத்து அடுத்த முறை நீதான் வெற்றி பெறுவாய் என்று ஆறுதலான வார்த்தைகளைக் கூறி உற்சாகப்படுத்துங்கள்.

* 'வெற்றியும், தோல்வியும் வீரனுக்கு அழகு' என்று அவ்வப்போது உங்கள் குழந்தைகளுக்கு எடுத்துக் கூறுங்கள். 'தோல்விகள்தான் வெற்றியின் படிக்கற்கள்'. 'தோல்வியில் இருந்துதான் வெற்றிக்கான பாடம் கற்க முடியும்' என்றும் எடுத்துக் கூறி உங்கள் குழந்தையின் மனதை இளமையிலேயே திடப்படுத்துங்கள்.

* தன்னம்பிக்கையையும், வீரத்தையும் ஊட்டி வளர்க்கும் விதத்தில், ஜான்சி ராணி லெட்சுமிபாய், வீரசிவாஜி, நெப்போலியன், மாவீரன் அலெக்சாண்டர் போன்றவர்களின் வீரத்தைச் சுட்டிக்காட்டும் சம்பவங்களை கூறுங்கள்.

* உங்கள் குழந்தைகளிடம் உள்ள திறமை சார்ந்த தகவல்களையும், அந்த துறையில் வெற்றி பெற்றவர்களின் வாழ்க்கையில் நடந்த சுவையான சம்பவங்களையும் அவ்வப்போது எடுத்துக் கூறுங்கள்.